Monday, 12 February 2018

தமிழ்

உயர்தனிச் செம்மொழி

பாவலரேறு பெருஞ்சித்திரனார்:

“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் 
வேரூன்றிய மால்முதல் உயிர்மொழி”

என்று தமிழின் பெருமையைப் போற்றுகிறார் பெருஞ்சித்திரனார்.

செம்மொழியின் இலக்கணம்:

“திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.

பாவாணர் கூற்று:

“தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி” என்பார் பாவாணர்.

முஸ்தபாவின் செம்மொழி தகுதிப்பாடுகள்:

தொன்மை, பிறமொழித் தாக்கமின்மை, தாய்மை, தனித்தன்மை, இலக்கிய வளமும் இலக்கியச் சிறப்பும், பொதுமைப் பண்பு, நடுவுநிலைமை, பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை வெளிபாடு, மொழிக் கோட்பாடு எனப் 11 தகுதிகளை அறிவியல் தமிழறிஞர் முஸ்தபா வரையறுத்துள்ளார்.

தொன்மை:

முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம். அவன் பேசிய மொழி தமிழ் மொழியே என்பர்.

உலகம் தோன்றிய போதே தோன்றிய தமிழை, அதன் தொன்மையைக் கருத்து “என்றுமுள தென்தமிழ்” என்பார் கம்பர்.

பிறமொழித் தாக்கமின்மை:

பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்காது.

அனால், தமிழ் ஒன்றே பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது.

தாய்மை:

தமிழ் மொழியானது திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்குத் தாய்மொழியாகத் திகழ்கிறது.

தமிழ் மொழி பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது என்பார் கால்டுவெல்.

1090 மொழிகளுக்கு வேர்ச்சொல்லையும், 109 மொழிகளுக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது தமிழ்.

தனித்தன்மை:

இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைத் கொண்டது தமிழ்.

தமிழர் அகம், புரம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.

திருக்குறள், மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்துள்ளது.

இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு:

உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.

இவற்றின் மொத்த அடிகள் = 26350.

அக்காலத்தே இவ்வளவிற்கு “விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகின் வேறு எம்மொழியிலும் இல்லை” என்பது உலக இலக்கியங்களை ஆய்ந்த “கமில்சுவலபில்” என்னும் செக் நாடு மொழியியல் அறிஞரின் முடிபு.

மாக்சுமுல்லர் என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும் பாராட்டி இருக்கின்றார்.

சங்க இலக்கியங்கள் “மக்கள் இலக்கியங்கள்” எனப்படும்.

“தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்கச் விருப்பதை உண்டாக்குவது” என்பார் கெல்லட்.

நமக்கு கிடைத்த இலக்கண நூல்களுள் மிகவும் பழமையானது தொல்காப்பியம்.

தொல்காபிய்யம் மூன்று இலக்கணங்களை கூறியுள்ளார். அவரின் ஆசிரியர் அகத்தியர் ஐந்து இலக்கணங்களை கூறியுள்ளார்.

பொதுமைப் பண்பு:

தமிழர் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தவர்கள்.

செம்புலப் பெயல்நீர்போல அன்புள்ளம் கொண்டவர்கள்.

நடுவுநிலைமை:

சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம் கடந்தவை.

இயற்கையோடு இணைந்தவை.

மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துக்களை மொழிபவை.

பண்பாடு, கலை பட்டறிவு வெளிப்பாடு:

சங்கப் படைப்புகள், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், பிறன்மனை நோக்காப் பேராண்மை” முதலிய பண்பாட்டு நெறிமுறைகளையும் வெளிப்படுத்திகிறது.

உயர் சிந்தனை:

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என உலக மக்களை ஒன்றினைந்து உறவுகளாக்கிய உயர்சிந்தனை மிக்கது புறநானூறு.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனத் திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது.

கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு:

தமிழ்ச்சான்றோர் மொழியை, “இயல், இசை, நாடகம்” எனப் பிரித்து வளமடையச் செய்தனர்.

எளிய குடிமகனையும் குடிமகளையும் காப்பியத் தலைவர்களாக்கிக் காப்பியம் படைத்தனர்.

மொழிக் கோட்பாடு:

“இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது” என்பார் முனைவர் எமினோ.

ஒருமொழிக்கு 35 ஒலிகள் இருந்தாலே போதும் என்பர். ஆனால் தமிழோ 500 ஒலிகளைக் கொண்டுள்ளது.

செம்மொழி:

இவ்வருஞ்சிறப்புமிக்க தமிழைச் “செம்மொழி” என அறிவித்தல் வேண்டும் என்ற முயற்சி 1901இல் தொடங்கி 2004வரை தொடர்ந்தது.

நடுவண் அரசு 2004ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.

No comments:

Post a Comment

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்*

*PIN குறியீட்டிற்கு விடைபெறுகிறேன்* அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றா...